இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்..!

ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.5,000 தருவதாக ஒரு திட்டம். மாதம் ரூ.5,000 என்றால் ஆண்டுக்கு ரூ.60,000. இது 60 சதவிகித வருமானம் ஆகும். இதனை ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துடன் ஒப்பிட்டு பாருங்கள். இப்போது வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பிறகு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு ஆண்டுக்கு 6 சதவிகிதம்தான் வருமானம் கொடுக்கிறது. தபால் அலுவலக சேமிப்பு திட்டம் என்றால் இதனை விட சற்று கூடுதல் வட்டி கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்ட் கடன் திட்டங்களில் சுமார் 8%, பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் 12-14 சதவிகிதம்தான் வருமானம் கிடைக்கும். நிறுவனப் பங்கு முதலீடு என்றால் 15-20 சதவிகித வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் நிறுவனப் பங்குகளில் வருமானத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கூடவே அதிக ரிஸ்க் இருக்கிறது.
பான்ஸி திட்டம்..!
ஆண்டுக்கு 60 சதவிகிதம் வருமானம் தரும் திட்டத்தை பான்ஸி திட்டம் (Ponzi Scheme) என்பார்கள். இந்தத் திட்டத்தில் மிக அதிகப்படியான வருமானத்தை தருவதாக உறுதி அளிப்பார்கள். எனது நண்பர் ஒருவர் இது போன்ற திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்திருக்கிறார்; அவருக்கு மாதம் ரூ.50,000 அவரின் வங்கிக் கணக்கு வந்துகொண்டிருக்கிறது என்கிறார்.
சதுரங்க வேட்டை என்று ஒரு தமிழ் சினிமாவில் ஒரு வசனம் வரும். ‘ஒரு வரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரின் ஆசையை தூண்ட வேண்டும்.’ என்பது அந்த வசனம் ஆகும்.
இந்த பான்ஸி திட்டத்தில் ஒருவரை முதலீடு செய்ய வைக்க, அவருக்கு அபரிமிதமான வருமானம் தருவதாக சொல்லி பேராசையை தூண்டுவார்கள்.
இப்படி ஆண்டுக்கு 60% வருமானம் தருவதாக சொல்லும் முதலீட்டுத் திட்டம் நிச்சயம் மோசடி திட்டமாக தான் இருக்கும். ஆனால், அந்தத் திட்டத்தை வைத்திருப்பவர்கள், இந்தத் திட்டத்தில் ரிஸ்கே கிடையாது. மாதா மாதம் உங்கள் வங்கிக் கணக்குக்கு பணம் வந்து சேர்ந்துவிடும் என உறுதி அளிப்பார்கள்.
சாத்தியமில்லாத, தெளிவு இல்லாத திட்டம்..!
‘உங்களால் எப்படி ஆண்டுக்கு 60 சதவிகித வருமானம் கொடுக்க முடியும் என்றால் நடைமுறைக்கு சாத்தியமில்லாத, தெளிவு எதுவும் இல்லாத ஒரு திட்டத்தை சொல்வார்கள். உதாரணத்துக்கு, புதிதாக வந்திருக்கும் கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்திருக்கிறோம். இது 100 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து தான் உங்களுக்கு 60 சதவிகித வருமானம் கொடுக்கிறோம் என்பார்கள். அல்லது ஃப்யூச்சர்ஸ்-ல் முதலீடு செய்கிறோம் அல்லது ஆப்ஷன்ஸ்-ல் முதலீடு செய்கிறோம். எங்களுக்கு 200 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்கிறது என்பார்கள். கிரிப்டோ கரன்ஸி, ஃப்யூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் மாதா மாதம் தொடர்ந்து நிலையான வருமானம் கிடைக்க வாய்ப்பு இல்லை. இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் எல்லாம் நடுத்தர வருமானப் பிரிவினர், பணி ஓய்வுப் பெற்று கையில் மொத்தப் பணம் வைத்திருப்பவர்கள்தான். இவற்றை எல்லாம் மிக மோசமான விஷயம் என்னவென்றால் இது போன்ற திட்டங்களில் கடன் வாங்கி முதலீடு செய்வது மற்றும் சொத்தை விற்று பணம் போடுவதாகும். தனியார் நிதி நிறுவனங்களில் 18%, 20%-க்கு எல்லாம் கடன் வாங்கி, 60 சதவிகித வருமானம் கிடைக்கிறதே என பேராசைப்பட்டு முதலீடு செய்கிறார்கள்.
பிரச்னைக்கு யாரிடம் முறையிடுவது?
வங்கியில் முதலீடு செய்யும் போது பிரச்னை ஏதும் என்றால் ரிசர்வ் வங்கி தீர்த்து வைக்கும். மேலும் போடும் முதலீட்டுக்கு ரூ.5 லட்சம் வரைக்கும் இன்ஷூரன்ஸ் உத்தரவாதம் இருக்கிறது. பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சிக்கல் என்றால் செபி என்கிற அமைப்பிடம் முறையிட முடியும். அதேநேரத்தில், 60 சதவிகித வருமானம் தருகிறோம் என்று சொல்கிற பான்ஸி திட்டத்தில் பிரச்னை என்றால் யாரிடமும் புகார் செய்ய முடியாது.
எந்த ஒரு முதலீட்டுத் திட்டத்திலும் 12 சதவிகிதத்துக்கு மேல் உறுதியான வருமானம் தருகிறோம் என்று சொன்னால் மிகவும் உஷாராக இருப்பது அவசியமாகும். அதுவும் 50% வருமானம், 60% வருமானம் என்றால் இரட்டை உஷாராக இருப்பது நல்லது. இது போன்ற திட்டங்களில் ஒருவரிடம் வாங்கும் பணத்தைதான் மற்றவர்களுக்கு வட்டியாக கொடுத்துக்கொண்டிருப்பார்கள். ஒரு குறிப்பிட்டத் தொகை மொத்தமாக சேர்ந்த உடன் (ரூ.100 கோடி, ரூ.1000 கோடி) தலைமறைவாகி விடுவார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும் இது போன்ற திட்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். முதலீட்டாளர்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்.
